Friday, October 26, 2012


108
------------------------------------------------

காலனை துரத்த காற்றாய்,
கண்ணீரை துடைக்க தோழனாய்,
கருமம் தீர்க்க கடவுளாய் ,

எங்கிருந்தாலும் வருவான் அவன் !!

மனிதர் உயர் நிலை தாழ்நிலை பார்ப்பதில்லை 
சாதியையும் மதமும் அவனை எதிர்ப்பதில்லை 

விபத்தோ? தீயோ ?குற்றங்களோ?!
நண்பனோ ? பகைவனோ ?அயலானோ ?

தயக்கமின்றியே அழைத்திடுங்கள் ,
ஒரு உயிரின் பிரிவை தடுத்திடுங்கள் !

அழைத்த உடனே! அன்னையை போல் 
வேகமாய் வந்தே உதவிடுவான் |

அழைக்கும் வாய்ப்பில்லைஎன்றாலும் 
வழியில் எங்கேனும் ஒலிகொண்டு வழி கேட்டால் 
சற்றே ஓரமாய் ஒதுங்கி
வழி கொடுங்கள் .

யாரறிவார்  அந்த சில நொடிகள் கூட 
பல உயிர்களை காக்கலாம் ?

                                                   இம்மானுவேல் .ம 
                                                   கோவை 

Thursday, September 15, 2011

எங்கே போனது எங்கள் தமிழ் ?

விரைந்து போகின்றது காலம் அதில்
மறைந்து போகின்றது தமிழ் !

அறிவித்த ஆசிரியர்களும்
தெளிவித்த அறிஞர் பெருமான்களும்
தேடியே சேர்க்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை
அயல்மொழிவழிக்கல்வியில்

வீதியில் விளம்பரமும்
வீடேறும் கடிதங்களும் ஏந்தியே
திரிகின்றன அம்மொழியை

தேநீரும் கொட்டைவடிநீரும் குடித்தால் திகட்டலாம்
தமிழில் படித்தால் திகட்டுமோ ?

அம்மாவென்றும் அப்பாவென்றும்
தாய்மொழியில் அழைப்பதில் தரிக்கும் இன்பம்
அந்நியமொழியில் தரித்திடுமோ ?

இரண்டாயிரம் வருடம்
முதிர்ந்தவள் என்றாலும்
முலைப்பால் கொடுத்தவளல்லவா?

கூனிக் குறுகி நடக்கிறாள் அவள்
குடிசை கொடாவிடிலும்
குச்சியாவது கொடுங்கள் !

உங்கள் சந்ததிக்கு
அயல்மொழிக்கு அர்த்தம் தேடும்
அகராதிகள் அழித்துவிட்டு
தாய்மொழிக்கு அர்த்தம் தேடும்
அகராதிகளை அளித்துவிடாதிர்கள்

உயிருக்கு மொழிகொடுத்த தமிழ்த் தாயவளை
இறக்கவிடாதிர் நண்பர்களே உங்களை
இரஞ்சியே கேட்கிறோம் !

Monday, September 12, 2011

தினசரி நாட்காட்டி

கண்கள் .
வலது புற கண்ணாடி ஜன்னலில்
உன் முகத்தை எனக்கே
வரைந்து காட்டுகிறது

காதுகள் .
அலைபேசியுடன் அடிக்கடி
சேர்ந்துகொண்டு
உன் அழைப்பை ஏந்தி வருவதுபோல
வேஷம் பூசி பின் வேறு குரலை தேர்வு செய்கிறது


உதடுகள் .
நீ சென்ற வாரம் மீதம் வைத்து சென்ற
கதையை தப்பு தப்பாய் சொல்லிக்கொண்டிருக்கிறது
கோயில் பூக்களிடம் உன் சார்பாக

கைகள் .
நீ இருக்கும் இடம் நோக்கி
நீண்டு நீண்டு சுருக்குகிறது இரவு பாயை
தூங்குவதற்கு முன்னரே

கால்கள் .
வாசல் வரை சென்றுவிட்டு திரும்புகிறது
நூறுமுறை வெறுமனே
வழக்கமாய் நீ வரும் வாரத்தின் ஓரங்களில்


இதயம்.
உன் நினைவுகளோடு
ஐந்து நாட்கள் நடத்தும் நாடகத்தில்
நடிக்கிறேன் என்னை சுற்றும் உறவுகளோடு
சிரிப்புக்குள் பல
பாத்திரங்களை உள்ளடக்கியவளாய்


சில சமயம் தோன்றும் என்னில்
உனக்கும் எனக்கும் சேர்ந்தாற்போல்
சனியும் ஞாயிறும் மட்டும் உள்ள
ஒரு தினசரி நாள்காட்டியை
உருவாக்கலாமா என்று

Monday, September 5, 2011

எச்சில் நிமிடங்கள்

அடித்து ,உதைத்து, மிதித்து

ஏறிக்கொள்கிறது கால்கள்
பின் ஓரமாய் பட்டாலே
ஓங்கி வலிக்கிறது.

நாலு நாளாய் தான்
குளிக்கவில்லை என்றாலும்
அருகிலிருப்பவர் வியர்வைக்கு
விளக்கம் கேட்கிறது மூக்கு .

சாய்ந்துகொள்ள சௌகர்யம்
தேடுகிறது முதுகு
கிடைக்கவில்லை என்றால்
பிறர் முதுகை அசௌகரியபடுத்துகிறது .

யாரவது எழ மாட்டார்களா ?
எட்டுத்திசையும் சுற்றிப்பாக்கிறது
எழுந்துவிட்டால் வேலி அமைத்து
வழி கொடுக்கிறது கரங்கள்.

இன்னும் தீரவில்லை
இந்தப்போராட்டம் அடுத்ததாக
ஜன்னலோரம் அமர
அருகிலிருப்பவனை அவசரப்படுத்தி
வீட்டுக்கு அனுப்புகிறது

எல்லாம் முடிந்ததா என்றால்
இல்லவே இல்லை
பேருந்தின் ஓர இருக்கையில்
தூங்குவதுபோல் நடிக்கிறது
கம்பியைபிடித்தபடி நிற்கிறாள்
ஒருத்தி கைக்குழந்தையுடன்
முடியப்போகும் பத்தாவது நிமிடத்தில்
பின்னாலே திரும்பிப் பார்க்கிறது
தெரிந்தவர்கள் தெரிகிறார்களா என்று
இறங்கும் போதும் கூட இறங்காத
இரக்கத்தோடு

துப்ப நினைக்கும் போதே
ஊறிவிடுகிற
இந்த காலத்தின் எச்சில் துளிகள்
வேண்டியவர்க்கு மட்டும்
ததும்பி வழிகிறது
வேண்டாதவர்க்கோ
தாகம் தெளிக்கிறது

Thursday, September 1, 2011

வெடிகுண்டு

அந்த மருத்துவமனை

அந்தியில்
இருக்கும் உயிர்களையும்
இல்லாமல் போனவர்களையும்
வைத்து அன்றைய
வருமான கணக்கெழுதிக்கொண்டிருந்தது

மரணம் எந்த அறை
திறந்துள்ளதென பார்த்து
நலம் விசாரிக்கும் சாக்கில்
நலிந்து போன இதயங்களை
இன்று இரவு நம்ம வீட்டுக்கு
போய்விடலாம் என்றது

அங்குள்ள
குழந்தைகள் அங்கும் இங்கும்
ஓடிக்கொண்டும்
சிரித்துக்கொண்டும்
இருந்தார்கள் அங்கே மாட்டியிருந்த
புகைப்படங்களில்


கழிவறையின்
கதவிடுக்கில்
கடிகாரம் பொருத்தி
நேரம் வைத்து
நகர்ந்தேன்

பிரசவ அறையின் முன்னே
ஏதோ ஒரு தலை பையனின்
தலைமகன் அவரது
தலை பையனுக்காய்
தலைகவிழ்ந்து காத்திருந்தார்

அறுபதிலும் அன்பு
அவள்மேல்
குறையவில்லை அவரிடம்
மூத்திரம் எடுக்கிறார்
பாத்திரத்தில்
கை கால் வராமல் போன
மனைவிக்காக

மருத்துவர்கள்
ஏதோ ஒரு அவசரபிரிவிற்கு
அணைபோட முயன்று
கொண்டிருந்தார்கள்
யாருக்கோ
அவர் அவசியம் என்று

வாடிக்கையாளர் நேரம்
இன்னும்
இருபது நிமிடம் என
இருமிக்கொண்டிருந்தது
ஒலிப்பெருக்கி
கடைசியாக

தீவிரவாதத்தின்
மதம் என்னுள்
பிடிவாதமாய் இருக்க
இரக்கமில்லாமல்
இதயம் இறுக்கி நடந்தேன்
வாயிலை நோக்கி

யாரோ ஒருத்தருக்கு
வேகவைத்த
வாய்க்கரிசியை
வேகமாய் எடுத்து செல்கிறான்
என்னைபோன்ற
இளைஞன்

அவசர ஊர்தி உயிர்வலிக்க
கத்திக்கொண்டு வந்து
உயிர்பலியை தவிர்க்க
ஆசுவாசப்படுத்தி நின்றது
அதில் இருந்த
ஐந்து வயது சிறுவனின்
தலையிலிருந்து ரத்தம்
உடல் பாதுகாப்பிலிருந்து
விரைவாய் தப்பித்து கொண்டிருந்தது

ஊர்தியை கடக்க எத்தனிக்கையில்
யாரோ ஒருவர் என் தோளில் இடிக்க
பின்மண்டை அதன் கதவில் இடிக்க
மரணவலியை ஒத்திகை பார்த்து
மயங்கதுவங்கினேன்.
அருகிலிருந்த மருத்துவர் ஒருவர்
மங்கலாய் நெருங்கினார் விழிகளினருகே

கழிவறையின் மூலையில்
அந்த வெடிகுண்டு
மரணத்தோடு கட்டித்தழுவி
வைத்தவனையே
வெல்லப்போகிறோம் என்று
வாழ்த்து வாங்கிக்கொண்டிருந்தது.

ஒரு அரசியல்வாதியை
கொன்று போட வேளை
கிடைக்காமல் இத்தனை
உயிர்களுக்கு விலை
பேசிவிட்டேன் என்று நினைக்க
கண்களின் ஓரத்தில் நீர்த்துளி
வழிந்தோடிய குருதியோடு கலந்து
அப்பொழுதும் என்னில் உள்ள
தீவிரவாதம் மனிதாபிமானத்தை
தெரிவிக்க அனுமதி மறுத்தது
இனிமேல் நமக்கு நிரந்தர
ஓய்வுதான் என்று இமைகள் இரண்டும்
மூடிக்கொண்டன.

“பத்துமணிக்கு நான்
மீண்டும் வந்து பார்க்கிறேன் “ என்ற
மருத்துவரின் குரல்
நான் இன்னும் மரணிக்கவில்லை என
மூளைக்கு நம்பிக்கை அளிக்க
கண்திறந்து பார்க்கிறேன்
செவிலிப்பெண் ஒருத்தி
ஊசியில் மருந்தேற்றிக்கொண்டிருந்தாள்

அதே வேகத்தோடு வெடிகுண்டு
ஏன் இன்னும் வெடிக்கவில்லை
கேள்வி என்னுள் ஏற
அந்த அறையின் கடிகாரம்
வெடிக்கும் காலத்தை தாண்டி
விடியலைநோக்கி
மெதுவாய் ஓடிக்கொண்டிருந்தது
அவளிடம் சொல்லிவிட்டு
கழிவறையை பார்த்து நடந்தேன்.

அறையுனுள்ளே ஒருவரின்
ஆக்கிரமிப்பு அதனுள்ளிருந்துவரும்
நீர்விழும் ஓசை தெளிவாக்கிற்று
காத்திருந்தேன் கதவுதிறப்பிர்க்காக
இரண்டு நிமிடங்களில் வெளியேறினார்
நடுத்தரவயதுக்காரர்.
உள்ளே நுழைந்தேன்
தூக்கிவாரிப்போட்டது அங்கே எதுவுமில்லை

வெளியில்வந்து தாழிட்டுத்
திரும்பையில் எதிரில் நின்று
புன்சிரிப்புதிர்க்கிறார் மருத்துவர்
அத்தனை உயிர்களோடு
என்னையும் காத்த
மனிதாபிமானத்தை
சிவப்பு கூட்டல் குறியோடு
நெஞ்சில் சேர்த்து நிற்கிறார்
அவரின் வெள்ளை அங்கியின்
பரிசுத்ததில் என் தீவரவாதமும்
நீக்கப்பட்ட அந்த வெடிகுண்டும்
செயலிழந்து போயிருந்தது...


Sunday, August 28, 2011

அன்புள்ள அண்ணா

அன்று அமாவாசை
அம்மாவும்
அப்பாவும் என்றோ
என்னை மறந்து
மறைந்து போயிருந்தார்கள்
ஒரு தட்டில் புட்டுக்களை
எடுத்து வந்து உண்ண அழைத்தான்
உண்ணவேண்டுமென்றால்
கதை வேண்டுமென்றேன்
நிலாகதை சொல்லி அதில்
இரண்டு புட்டை ஊட்டினான்
பின் நிலா வேண்டுமென்றேன்
மீதமுள்ள ஒன்றை எடுத்து
வானத்தோடு ஒட்டி வைத்து
நிலாவாக்கினான்.
விடாமல் அவனையும்
மீண்டும் கேட்டேன் நிலா பக்கத்தில்
வேண்டுமென்று
சளைக்காமல் அவனுமே
தீர்ந்து போன புட்டை விட்டு
தட்டை காட்டினான்
ஓயாமல் நானும்
நிலவில் வண்ணம் வேண்டினேன்
புதினா சட்னியிலே தட்டுக்கு
பச்சை வண்ணமேற்றினான்
இப்படியே
பல கேள்விகளுக்கு
பதிலையும்
சில கேள்விகளுக்கு சிரிப்பையும்
பரிசாய் அளித்தான்....
நானும் வளர்ந்தேன்
என் ஞானமும் வளர்ந்தது
இன்று அமாவாசை
அம்மாவாக நான்
அப்பாவாக கணவர்
அண்ணா கூறிய
நிலாக்கதையை என் மகனுக்கு
நான் சொல்லிகொண்டிருந்தேன் ....
இருளோடு காணாமல் போன அந்த அன்பையும் சேர்த்து .

Friday, August 26, 2011

மலரட்டும் மனிதநேயம்

எங்கோ ஒரு தேசத்தில்
மனிதனே மனிதனை
மாண்பிழந்து வதை செய்ய.
இங்கே மனமுருகி வேண்டிடும் நேசம் !


ஏதோ ஒரு வெள்ளத்தில்
உடையிழந்து உறைவிடமிழந்து
உறவும் இழந்து உண்ணத்தவிக்கும் உயிர்களுக்கு
இதோ என்றளித்து உருகிப்பெருகும் பாசம் !

எப்படியோ ஒரு சாலையில்
படைத்த வாகனமே நொறுக்கி
படுக்கையாக்கி குற்றுயிராக்கி செல்கையில்
அப்படியே அணைத்துதவும் ஈரம் !

இவ்வாறெல்லாம்
இன்னும் எத்தனையோ தருணங்களில்
நெஞ்சத்தில் பிறப்பெடுக்கும்
அன்பின் மாற்றுருக்கள்
மலரட்டும் மனிதநேயமாய்
மனிதனுக்குள் ஆயிரமாயிரமாய் ...